بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: ஆகஸ்ட் 2009


ஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்?

>> புதன், 19 ஆகஸ்ட், 2009

சிம்லா: இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது என்று பாஜகவலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

நேற்று சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் 'டெவில்ஸ் அட்வகேட்' நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்துள்ள பேட்டியின் சில முக்கிய பகுதிகள்...

ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது. காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.

ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன்.

அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா.

அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே.

மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார்.

ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன்.

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது.

1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை. காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார்.

முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார். இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது. முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது.. ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது.

நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.

முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை. இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.

இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன்.

எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை. முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார்.

அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.

இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''. அங்கேயே பிரிவினை வந்து விட்டது.

ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர்.

ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர். ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர். ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார். ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது.

ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர்.

இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன். அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன. அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்கள் என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?.

இந்தியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு சம உரிமையோடு வாழ அனுமதி வேண்டும். அதைச் செய்யாத வரை பிரச்சனைகள் தீராது. முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலை சரியல்ல என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

அன்று அனுமன்.. இன்று ராவணணா?:

இந் நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சிம்லாவில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

ஒரு புத்தகம் எழுதியதற்காக நீக்கியுள்ளார்கள். உண்மையில் என் புத்தகத்தை பாஜத தலைவர்கள் படித்துக் கூட பார்க்கவில்லை.

என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கூறினார். இதை அத்வானியும் ராஜ்நாத் சிங்கும் டெல்லியிலேயே நேரில் சொல்லியிருக்கலாம்.

சிம்லா கூட்டத்துக்கு வரச் சொலிவிட்டு, இங்கு வைத்து கட்சியை விட்டு நீ்க்குவதாக போனில் சொன்னது தான் வருத்தம்.

நான் இதுவரை பாஜகவின் அனுமனாக இருந்தேன். இப்போது என்னை பாஜக ராவணனாக கருதுகிறது.

நான் ராணுவத்திலிருந்து மக்கள் சேவைக்கு வந்தவன். நான் பென்ஷன் வாங்கும் ஆசாமியும் அல்ல. 30 வருடமாக பாஜகவில் அரசியலில் இருந்தேன். அதன் ஆரம்பகால உறுப்பினர் தான். கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளேன். அது இப்படி முடிவுக்கு வரும் என்று நினைத்ததில்லை.

என் புத்தகத்தை வைத்து காங்கிரஸ் பிரச்சனை செய்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். காரணம் நாடு பிளவுபட காரணம் என்று நான் காங்கிரஸ் தலைவர்களைத் தான் அதில் விமர்சித்துள்ளேன். ஆனால், பாஜக பிரச்சனை செய்தால் என்ன செய்வது?. எல்லாவற்றையும் அரசியலாக்குவது தவறு. குறிப்பாக ஒருவரின் சிந்தனைகளுக்கு தடை போடுவது பெரும் தவறு.

ஜின்னா குறித்தும், நாடு பிளவுபட்ட அந்த வலி மிகுந்த நாட்களையும் தான் நான் புத்தகமாக்கினேன். அந்தப் புத்தகம் 5 வருட கடும் உழைப்பில் உருவானது. புத்தகம் எழுதியதற்காக நான் வருதப்படவில்லை. அதை கவனமாகப் படித்துப் பாருங்கள்.

இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார். ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.

அத்வானி எதிர்க் கட்சித் தலைவராக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இளைய தலைமுறையிடம் பொறுப்பைத் தருமாறு பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை தந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது குறித்து நான் ஏதும் கூற விரும்பவில்லை. நான் ஆரஎஸ்எஸ்சில் எந்தக் காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களது கருத்துக்களுக்கு நான் எப்படி பதில் சொல்வது என்ற ஜஸ்வந்த் சங் பரிவார் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்


See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.

Read more...

ரமளானில் தினமும் இரவு நடைபெறும் பயானை இங்கு நெரடியாக காணலாம்

>> திங்கள், 17 ஆகஸ்ட், 2009

Broadcasting Live with Ustream.TV



 S.S.Bahurudeen


Love Cricket? Check out live scores, photos, video highlights and more. Click here.

Read more...

ரமளான் மாத நோன்பு

>> சனி, 15 ஆகஸ்ட், 2009


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

ரமளான் மாத நோன்பு


இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம் வரவிருக்கின்றதுஇ அது தான் ரமளான் மாதம். இந்த மாத்தின் சிறப்பிற்கு முக்கிய காரணம் இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டது தான்..
நோன்பு நோற்பது கட்டாயக் கடமை:

புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்துமுஸ்லிம்களின் மீதும் கட்டாயக்கடமையாகும். இதை 'திருக்குர்ஆன்' தெளிவாக பிரகடனம் செய்கிறது.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்கு உங்களுக்கு முன்சென்றவற்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடைமையாக்கப்பட்டுள்ளது. 

அல் குர்ஆன் 2:183

ரமளான் மாதம் எத்தகையது என்றால் அமமாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக்கூடியதும் தெளிவான சான்றுகளைக் கொண்டதும்(நன்மை தீமைகளை) வேறுபடுத்திக்காட்டக்கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். அல் குரஆன் 2:185

 நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடைமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 8

நோன்பின் நோக்கம்

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத்தெளிவாக கூறிவிட்டான் அந்தக்காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடைமையாக்கப்படவில்லை. நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்கு என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
''
யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903

 

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள்தனமாக நடந்துகொண்டால் 'நான் நோன்பாளி' என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.. அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி,திர்மிதி.

 

நோன்பினால் கிடைக்கும் மறுமைப்பலன்கள்:

நோன்பின் மூலம் இவவுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

'ஓவ்வொரு நன்மையான காரியத்திற்ககும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே பரிசளிப்பேன்'; என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி

'நோன்பு, நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்வின் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்' என நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி

இறைவனை சந்திப்பதும், பாவங்கள் மன்னிக்கப்படுவதும் எப்போது???

'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் 'என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். 

'யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்ததும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி

ரமழான் மாதத்தை முடிவு செய்தல்:

ரமழான் மாதத்தை உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராக தான் அடைவார்கள் என்பதால் தான் 'யார் அம்மாதத்தை அடைகிறாரோ'என்று அல்லாஹ் கூறுகிறான்.

'நீங்கள் பிறை பார்த்து நோன்பை துவங்குங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேகமுட்டம் ஏறபட்டால் ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள்' என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பொன்மொழி
அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி..

சென்ற ரமளானில் இருந்தவர்களில் பலர் இன்று இல்லை. எனவே வல்ல நாயன் இந்த ரமளான் மாதத்தை அடையும் பாக்கியத்தை நமக்குத் தந்து, அந்த ரமளானில் கடைப்பிடிக்கும் காரியங்களை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக! 

தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), அபுதாபி


See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.

Read more...

பள்ளிகளில் பாலியல் கல்வி - ஒரு கண்ணோட்டம்!



பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இதை எதிர்க்கும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாரஷ்டிரம், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், "பாலியல் கல்விக்கான பாடத்திட்டம் இந்திய குழந்தைகளுக்கு ஏற்றவகையில் இல்லை" என்றன. கேரளா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதோடு பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கமிட்டியையும் அமைத்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் செளஹான், மத்தியக் கல்வி அமைச்சகத்திற்கு எழுதியக் கடிதத்தில், "இந்தியக் கலாச்சாரத்தையும் அதன் உன்னதத்தையும் அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது; மாணாக்கர்களுக்கு பாலியல் கல்வியைப் போதிப்பதைவிட யோகா மற்றும் இந்தியக் கலாச்சாரத்தைப் போதிப்பதே அவசியம்" என்றுக் கூறியுள்ளார்.


ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கன்ஷியாம் திவாரி, "பள்ளி மாணாக்கர்களின் மனங்களைக் கெடுக்கத் தகுதியானவையாக பாலியல் பாடத்திட்டம் இருப்பதாகக்" கூறினார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம், "பாலியல் கல்வியை ஏன் எதிர்க்கிறீர்கள்?" என்று பத்திரிகையாளார்கள் கேட்டபோது, "மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுமானால் பாலியல் கல்வி அவசியப்படலாம். பரந்த கலாச்சாரப் பின்னணி கொண்ட இந்தியாவிற்கு இது அவசியமில்லை. இது நமது குழந்தைகளிடம் எதிர்மறை எண்ணங்களையே தோற்றுவிக்கும்" என்றார்.

இவர்கள் மட்டுமல்லாது பாலியல் கல்வியைப் பள்ளிகளில் போதிப்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்புக்குரல் ஒலிக்கின்றது. மத அடிப்படைவாதிகள் எதிர்க்கும் பெரும்பாலான விசயங்கள் மதக்கோட்டிற்கு எதிராக இருப்பதே காரணமாகச் சொல்லப்படும். ஆனால், பாலியல் கல்வி இஸ்லாமியக் கோட்பட்டிற்கு எதிரானதன்று!

பால்வினை நோய்கள், போதைப்பழக்கம், பலாத்காரம், பணியிட/படிப்பிடச் சீண்டல்கள் ஆகியவற்றிலிருந்து விழிப்படைவதற்காகப் பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வி அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது எத்தனை சதவீதம் சாத்தியமாகும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. சில விஷயங்களில் அரசாங்கத்தின் தவறான அணுகுமுறை எதிர்மறை விளைவுகளைத்தான் தோற்றுவித்துள்ளன.

உதாரணத்திற்கு எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் மக்களிடையே எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் நல்ல நோக்கத்தில் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த இயக்கம் எயிட்ஸை ஒழிப்பதற்கு இறுதியாகச் சொல்லியத் தீர்வு, அது துவங்கப்பட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்ய உதவியதோ இல்லையோ, மக்களிடையே விபச்சாரம் பல்கிப்பெருக இவ்விழிப்புணர்வு இயக்கம் நன்றாகத் துணை புரிந்தது.

ஐதராபாத்தில் நடந்த செக்ஸ் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாநாட்டில், பேராசிரியர்கள் சஞ்சய் சதுர்வேதி, விஜய் குரோவர் ஆகியோர் பேசும் பொழுது, "பாதுகாப்பற்றச் செக்ஸ் உறவுகளால், நகர மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர்; எய்ட்ஸ் நோய்க்கு ஆட்பட்டுள்ளனர் என்று ஏகப்பட்டத் தகவல்கள் வந்து விட்டன. 'மாணவ, மாணவிகளிடமும் பாதுகாப்பற்றச் செக்ஸ் பழக்கம் ஆரம்பித்துவிட்டது' என்பதை எங்கள் சர்வே எடுத்துக் காட்டுகிறது. இதைத் தடுக்க வேண்டியது நம் கடமை" என்று பேசியுள்ளனர்.

ஒட்டுமொத்த எயிட்ஸ் ஒழிப்பு/விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் பாலியல் எண்ணத்தைத் தூண்டும் காரணி/சூழல் களைத் தடுக்க வேண்டும் என்று எவரும் மறந்தும் சொல்லவில்லை . அவர்களின் பரிந்துரை எல்லாம், "பாதுகாப்பான உறவு தான் எயிட்ஸைத் தடுக்கும்" என்பதாகவே இருக்கிறது. ஏனென்றால் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு வாரிவழங்கும் முதலாளிகள் தான் மேற்கண்டப் பாலியல் எண்ணங்களைத் தூண்டும் காரணிகளையும் பரப்புகின்றனர். அதாவது தொட்டிலையும் ஆட்டி விட்டு, குழந்தையையும் கிள்ளிவிடுதல் அரசாங்க அனுமதியுடன் நடைபெறுகிறது.

எயிட்ஸைத் தடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட எயிட்ஸ் விழிப்பு/ஒழிப்பு இயக்கங்கள் எவ்வாறு விபச்சாரம் பெருகத் துணை புரிந்தனவோ, அது போன்றே ஆண், பெண் இணைந்து படிக்கும் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படப் போகும் பாலியல் கல்வியும் மாணவ, மாணவிகளிடையே பண்பாடற்றப் பழக்க வழக்கங்களை உருவாக்கும் விதத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவே அதிகம் வாய்ப்புள்ளது.

பாலியல் கல்வி நடைமுறையிலுள்ள மேற்கத்திய நாடுகளின் அனுபவங்களும் அவை தரும் அறிக்கைகளும் அதிர்ச்சியடைய வைக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனில் தான் இளம்பிராயக் கருக்கலைப்புகள் அதிகம்(ஆதாரம்: http://www.unicef.org.uk/youthvoice/sexeducation.asp). இங்கு பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி கடந்த முப்பது வருடங்களாக நடைமுறையில் உள்ளது என்பது கவனிக்கத் தக்கது! வரைமுறைகளற்ற உறவுகளை முன்னிலைப்படுத்தி கூட்டுக்குடும்ப அமைப்பைப் புறக்கணித்தன் விளைவு இது.

குடும்பமுறை அமைப்புகள் சிதையாமலிருக்கும் இந்தியாவில் இதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாமல் இருந்த நிலை எண்ணிப்பார்க்கப்பட வேண்டியதாகும். ஆனால், மேற்கத்திய மோகத்தில் தங்களைப் பலிகொடுக்கும் சில பெரிய பணக்காரக் குடும்பங்களில் இத்தகையச் சீரழிவு நிலை இருப்பதையும் மறுக்க இயலாது.

சமீபத்தில், தில்லியைச் சேர்ந்த, மருத்துவ அறிவியற் பல்கலைக்கழகக் கல்லூரி (University College of Medical Sciences) ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. தெற்கு தில்லியிலுள்ள இரண்டு கல்லூரிகள், மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் நடத்திய சர்வேயில், "சக மாணவியுடன் உறவு வைத்துள்ளேன் " என்று 10% மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த 10% மாணவர்களுள், 57% பேர், "ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துள்ளோம்" என்றும், "அப்போது மது, போதையும் ஏற்றிக்கொள்வோம்" என்றும் மிகச் சாதாரணமாகக் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பில் மாணவர்கள்தான் அதிகம் பங்கேற்றனர். 13 வயதுக்குள் செக்ஸ் உறவு வைத்துக் கன்னித்தன்மையை 13% மாணவர்கள் இழந்துள்ளனர். அதுபோல, மாணவிகளில் 6% பேர் கன்னித் தன்மையை 13 வயதுக்குள் இழந்துள்ளனர். பலருடன் உறவு வைத்துள்ள மாணவர்களில் 54% பேர், "எப்போதாவது ஆணுறை பயன்படுத்துவதாகக்" கூறியுள்ளனர். 75% பேர், "ஆணுறை பயன்படுத்தியதே இல்லை" என்றனர். இவ்வாறு இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

வயது 13 ஆவதற்கு முன்பேயே, 'உறவு' வைத்துள்ளனர் 25% மாணவர்கள். ஒருவருடன் மட்டுமில்லை, நான்கைந்து மாணவர்களுடன் உறவு வைத்துள்ளனர் 57% மாணவ, மாணவிகள். இவர்களில் 75% பேர், உறவின் போது ஆணுறை பயன்படுத்தியதே இல்லை. "உறவு கொள்ளும் முன் மது, போதை சாப்பிடுவது வழக்கம்" என்று சொல்கின்றனர் 30% பேர். இந்தப் பகீர் தகவல்கள் எல்லாம், ஏதோ வெளிநாட்டு சமாச்சாரங்கள் என்று நினைத்தால் தவறு; இந்தியத் தலைநகர் தில்லியில்தான் இவை அனைத்தும் நடந்தேறுகின்றன .

இந்தக்கல்வி நிறுவனங்களில் பணக்கார மாணவ, மாணவிகள்தான் படிக்கின்றனர் என்பது கவனிக்க வேண்டியதாகும். 14 வயது முதல் 19 வயது வரை உள்ள 550 மாணவ, மாணவிகளிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கூச்சம் சிறிதுமின்றிப் பதில் அளித்த இவர்கள், "உறவு வைப்பதில் தவறு என்ன இருக்கிறது?" என்றும் கேட்டது தான் இன்னும் வேதனையான விஷயம்.

இவ்வளவு அப்பட்டமாக எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி மாணவர்கள் இருப்பதற்கான காரணம் ஏற்கெனவே அரசு அனுமதி அளித்து நடந்து வரும் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், ஒளிவு மறைவற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் படியிலான சூழல்களும் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது, இனி பள்ளிகளிலேயே அதனைக் குறித்தப்பாடங்களை விளக்கிக் கொடுக்கப்படும் சூழல் வரும் பொழுது ஏற்படும் பின்விளைவுகளை/எதிர்மறை விளைவுகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இதில், இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பாலியல் கல்வியின் தேவைபற்றி மாணக்கர்களிடமே கருத்துக் கேட்கிறார்கள். LKG வகுப்பு மாணவனிடம் SSLC பாடம் பற்றி கருத்துக் கேட்பது எப்படி அபத்தமோ அதுபோல்தான் தங்களுக்குப் போதிய அனுபவமும் அறிவும் இல்லாத விசயத்தில் கருத்துக் கேட்பதும் அபத்தமே! பள்ளிகளில் பாலியல் கல்வியைப் போதிப்பதை விட பெற்றோருக்குப் போதித்துப் பிள்ளைகளுக்கு உரிய வயதில் எடுத்துச் சொல்லும் பொறுப்பை அவர்களிடம் சுமத்தலாம்.


மாணாக்கர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்தியாவில் எயிட்ஸ் பரவக் காரணம் என்பது பழியை மாணாக்கர்கள் மீது போடும் பொறுப்பற்றப் பேச்சாகும்!

சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, இந்தியாவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிகை ஐந்தரை கோடிக்கும் அதிகம். 15-29 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 50% க்கும் அதிகம். இதற்கெல்லாம் காரணம் மாணவர்கள் மட்டுமா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 1980 ஆம் ஆண்டிலிருந்தே பாலியல் கல்வி, தேசியக் கல்வித் திட்டத்தில் இருந்து வருகிறது. அதில், கரு உண்டாகாமல் தடுக்கும் பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் பால்வினை நோய்கள் பற்றி மட்டுமே போதிக்கப் பட்டன. இதன் காரணமாக இளையத் தலைமுறையினரிடம் குற்றமற்ற உடலுறவு மனப்பான்மை அதிகரித்தது.

2006 ஆம் ஆண்டு இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்பின்படி 8% இளைய தலைமுறையினரிடம் இத்தகைய முறையற்ற உறவு /பழக்கம் உள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தியாவின் 11 நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி , 18-30 வயதிற்குட்பட்ட பெண்களில் நால்வரில் ஒருவர் திருமணத்திற்கு முன்பு இத்தகைய முறையற்ற உறவு வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்! (இதைத் தொடர்ந்துதான் நடிகை குஷ்புவின் பேட்டி சர்ச்சைக்குள்ளானது !)

இதில் குறைந்த பட்சம் பாலியல் ஐயங்களை மகனுக்குத் தந்தையும், மகளுக்குத் தாயும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றாவது சொல்கிறார்களா என்றால் அதுவுமில்லை. மாணாக்கர்களுக்குத் தங்கள் தாய்-தந்தையை விட, ஆசிரியர்களிடமே மனம் விட்டுக் கேட்டறிந்து தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமாம்! MTV, Fashion TV க்களை குடும்பத்துடன் வெட்கமின்றி பார்த்து ரசிக்கும் இவர்கள் இதைச் சொல்லலாமா?.

குடும்ப உறவுகளைச் சீர்குலைக்கும் தொலைக்காட்சி சீரியல்களையும் ஆணும் பெண்ணும் அரை நிர்வாண உடைகளுடன் கட்டிப்புரளும் சினிமாக்களையும் வெட்கமின்றிக் குடும்பத்துடன் பார்க்க முடிபவர்களால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் பாலியல் ஐயங்களைத் தெளிவுபடுத்துவதில் வெட்கப்பட என்ன உள்ளது என்று தெரியவில்லை.


ஆக்கம்: நல்லடியார்.
நன்றி:சத்தியமார்க்கம்.காம்



See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.

Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP