கீழக்கரை பகுதியில் உள்ள தோட்டங்களில் சட்ட விரோதமாக செயல்படும் சூதாட்ட மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மையங்களை ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழக்கரை மக்கள் கோரி வருகின்றனர்.
கீழக்கரை பகுதியில் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள சில தோப்புகளில் உள்பகுதிகளில் தென்னங்கீற்றுகளால் கொட்டகை அமைக்கப்பட்டு சூதாட்ட கிளப்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொட்டகைகளில் 5க்கும் மேற்பட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒரு மேஜைக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை சூதாட வருபவர்களிடம் இருந்து வாடகையாக மட்டும் வசூலிக்கப்படுகிறது.
இந்த மையங்களுக்கு இளைஞர்களும், தொழிலாளர்களும் வந்து சூதாடி பணத்தை இழந்து செல்கின்றனர். மேலும் கடன் கொடுப்பதற்கு கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த மையங்களில் உள்ளனர். கொண்டு வரும் பணத்தை இழந்த பின்னர், இளைஞர்கள் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கடன் வாங்கி சூதாடி வருகின்றனர். சில கிளப்களில் உரிமையாளர்களே கந்து வட்டிக்கு கடன் கொடுத்து இளைஞர்களை சூதாட ஊக்குவிக்கின்றனர்.
இந்த தொழிலில் கிளப் உரிமையாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதால் தற்போது தோப்புகளில் சூதாட்ட கிளப்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடனடியாக இந்த சமூக விரோத செயலை தடை செய்ய வேண்டும் என கீழக்கரை பகுதி மக்கள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து கீழக்கரை நகர் மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இபுராஹீம் கூறுகையில், "சூதாட்ட கிளப்புகளால் எங்கள் பகுதி இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். பிளஸ் 2 மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறி வைத்து நடத்தும் இந்த கிளப்புகளை உடனடியாக தடை செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Read more...