ஆர்.எஸ் மடை அருகே கீழக்கரை இளைஞர் மீது தாக்குதல்
>> சனி, 25 பிப்ரவரி, 2012
தேதி: 23.02.2012
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
முதல்வர் அவர்களின் தனிப்பிரிவு
சட்டப்பேரவை கட்டிடம்,
சென்னை.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு!
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு இரவு நேரத்தில் செல்லும் பேரூந்துகளில் பயணம் செய்யும் பள்ளவச்சேரி, திருப்புல்லானி மற்றும் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்களை R.Sமடை என்ற ஊரை சேர்ந்த சிலர் கூட்டாக தாக்கி காயப்படுத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 22 ஆம் தேதி இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக சாயல்குடிக்கு இரவு 9.30 மணியளவில் சென்று கொண்டிருந்த பேரூந்தை பதினோராம் கழுங்கு சோதனை சாவடியில் 8க்கு மேற்பட்ட சமூக விரோதிகள் வழி மறித்து பேரூந்தில் பயணம் செய்த கீழக்கரையை சேர்ந்த ஒரு அப்பாவி இளைஞரை பேரூந்துக்குள் புகுந்து தாக்கி பேரூந்தில் இருந்து கீழே இழுத்து சென்று சுய நினைவு போகும் வரை கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கின்றார்கள். அந்த நபர் சுய நினைவு இழந்தவுடன் அவரை முட்புதர்கள் நிறைந்த சாலை ஓரத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அந்த வழியாக வாகனத்தில் வந்த கீழக்கரையை சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்ட நபரை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்த்துள்ளார். இது சம்மந்தமாக காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டு அடையாளம் தெரிந்த சில நபர்கள் மீதும் அடையாளம் தெரியாத சில நபர்கள் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமாக இருந்த சமூக விரோதிகள் மீது அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் குறிப்பாக பதினோராம் கழுங்கு சோதனைச் சாவடி, R.Sமடை பேரூந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் காவலர்களை நிறுத்தி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கும் படி எங்கள் கழகம் சார்பாகவும், பொது மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
மக்கள் நல பாதுகாப்பு கழகம்
முகைதீன் இப்ராகீம்
நகர் செயலாளர்
நகல்:
1) மரியாதைக்குரிய காவல்துறை தலைவர் அவர்கள்,
தமிழக காவல்துறை தலைமை அலுவலகம், சென்னை.
2) மரியாதைக்குரிய காவல்துறை துணைத் தலைவர் அவர்கள், தென்மண்டலம், மதுரை.
3) மரியாதைக்குரிய D.I.G அவர்கள், இராமநாதபுரம்.
4) மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், இராமநாதபுரம்.
5) மரியாதைக்குரிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், இராமநாதபுரம்
மக்கள் நல பாதுகாப்பு கழகம்
Reg No. 143/2010 18/127, வள்ளல் சீதக்காதி சாலை
கீழக்கரை – 623517.
இராமநாதபுரம் மாவட்டம்.